இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அன்னபூரணி’. இந்த படம் சமீபத்தில் ‘நெட்பிளிக்ஸ்’ ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு கிடைக்காத நிலையில், ஓ.டி.டி.யில் படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது.
ஆனால், அதற்குள் ‘அன்னபூரணி’ படத்திற்கு எதிராக போராட்டம் கிளம்பியது. இந்த படத்தில் இந்து மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாக இருப்பதாகவும் பஜ்ரங்தள் அமைப்பினர், மும்பை ஓசிவாரா காவல் நிலையத்தில் கடந்த 3 நாள்களுக்கு முன்னர் புகார் அளித்தனர்.
தொடர்ந்து நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மீது, பல்வேறு மாநிலங்களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகிறது. நேற்று முன்தினம் மத்திய பிரதேச காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் தற்போது மராட்டியத்தில் தானேவைச் சேர்ந்த மிரா பயேந்தர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நயன்தாரா உட்பட படக்குழுவினர் எட்டு பேர் மீது, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அன்னபூரணி பட சர்ச்சை குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை அழுத்தம் கொடுத்து ஓடிடியில் இருந்து நீக்கவைப்பது திரைத்துறைக்கே நல்லதல்ல.
ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கைக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. ஆகையால், இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளது” என தெரிவித்திள்ளார்.
இதையும் படிங்க: ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ‘வந்தா மல’ பாடல் ரிலீஸ்..!