Vijay Antony: இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ‘ரோமியோ’. இந்த திரைப்படத்தில் விஷாலின், மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை விஜய் ஆண்டனி வழங்கும் குட் டெவில் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்தப் படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘ரோமியோ’ படத்தின் செகண்ட் சிங்கிளான ‘வெத்தல’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘ரோமியோ’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர் ஒருவர் படத்தின் போஸ்டரில் பெண் மது அருந்துவதுபோல காட்சி வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு, பதிலளித்த விஜய் ஆண்டனி, “ஆண் பெண் இருவரும் மது அருந்துவது ஒன்று தான். இருவருக்கும் வேறுபாடு கிடையாது. மது என்பது அந்த காலத்தில் இருந்து இருக்கிறது.
ஜீசஸ் கூட மது அருந்தியிருக்கிறார். அப்போது இதற்கு பெயர் வேறு தற்போது இதற்கு பெயர் வேறு. படத்திற்காக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது அவ்வளவு தான்” என கூறினார்.
விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையான நிலையில் இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு தலைவர் பிலிப் நெல்சன் லியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “உலகமெங்கும் இருக்கும் அனைத்து கிறிஸ்தவ மக்களாலும், சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரும் போற்றக்கூடியவர் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து.
கிறிஸ்தவர்களையும், இயேசு கிறிஸ்துவையும் இழிவுப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார். திராட்சை ரசத்தை மதுவுடன் ஒப்பிட்டு இயேசு குடிப்பார் என எவ்வித ஆதாரமும் இல்லாமல் பேசியிருக்கிறார்.
இயேசு கிறிஸ்து மது குடித்தார் என பொது வெளியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் அவரது வீட்டின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.