அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) பல்வேறு மாநிலங்களில் உள்ள 30 நகரங்களின் வர்த்தக சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை வெளியிட்டது.
அதன் அடிப்படையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வர்த்தகர்களின் கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், “ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வர்த்தக சங்கங்கள் மூலம் சுமார் 30ஆயிரம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஸ்ரீராமர் கொடிகள், பேனர்கள், தொப்பிகள், ராமர் கோவிலின் உருவம் அடங்கிய அச்சிடப்பட்ட டி- சர்ட்டுகள், குர்தாக்கள் ஆகியவற்றுக்கு சந்தைகளில் அதிக தேவை இருக்கின்றன.
ராம் மந்திர் மாடல்களுக்கான தேவையும் உள்ளது. இதனால், நாடு முழுவதும் 5 கோடி மாடல்கள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த சந்தை விற்பனைக்காக பல்வேறு மாநிலங்களின் பல நகரங்களில் சிறிய உற்பத்தி நிலையங்கள் இரவும் பகலாக வேலை செய்து வருகின்றனர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, “அடுத்த வாரத்தில், டெல்லியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கடைகளில், ஸ்ரீராமர் கொடிகள் மற்றும் அலங்காரங்களை விற்கப்பட உள்ளன. பிருந்தாவனம் மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து நாட்டுப்புற நடனக் கலைஞர்கள், பாடகர்கள் வருவுள்ளனர். இதனால், டெல்லியில் மக்கள் பல கலாச்சார நிகழ்ச்சிகளைக் காண வாய்ப்புள்ளது” என்றார்.