உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வருகிற 15ஆம் தேதிக்குள் நிறைவடைந்து விடும். பின்னர் 16ஆம் தேதி பிரான் பிரதிஷ்தா பூஜை தொடங்கி, தொடர்ந்து 22ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெவ்வேறு பாரம்பரியங்களை சேர்ந்த 13 அகாராக்களின் 150 துறவிகள் மற்றும் சாமியார்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுதவிர, காசி விஸ்வநாத், வைஷ்ணவதேவி போன்ற பெரிய கோவில்களின் தலைவர்கள், மதம் மற்றும் அரசியலமைப்பு மையங்களின் பிரதிநிதிகள் என 2,200 விருந்திநர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
புத்த மத தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், நடிகை மாதுரி தீட்சித், இயக்குநர் மதுர் பண்டார்கர், தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, இஸ்ரோ இயக்குநர் நிலேஷ் தேசாய் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான அக்பர் தாஜ் என்பவருக்கு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர், முஸ்லிம் மத ஆராதனை பாடல்களை பாடுபவர். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
இவர், சிறு வயதில் இருந்து கடவுள் ராமரை புகழ்ந்து கவிகளை இயற்றியும், பாடியும் மற்றும் ஆராதனைகள் செய்தும் வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர், அயோத்தி நகருக்கு வருகிற 14ஆம் தேதி வருகை தந்து, ராமரை பற்றிய தன்னுடைய கவிகளை பாட இருக்கிறார்.