மதுரை மாவட்டம் மேலூர் கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூரணம்மாள். இவர் கனரா வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பூரணம்மாளின் மகள் ஜனனி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
அவருடைய நினைவாக கொடிகுளத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதற்கு தானமாக பூரணம்மாள் நிலம் வழங்கி இருக்கிறார். ரூ.4 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய அவரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அழியா கல்வி செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும்.
அந்த வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
மறைந்த தனது மகள் ஜனனியின் நினைவாக இந்த மகத்தான சேவையை செய்திருக்கும் அவருக்கு, குடியரசு தினத்தன்று நம் முதலமைச்சர், முதலமைச்சரின் சிறப்பு விருதினை வழங்கவுள்ளார்.
இந்த நிலையில், நாம் நினைவுப்பரிசை வழங்கி அவரை கவுரவித்தோம். அவரின் மகளுடைய திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். ஆயி அவர்களின் கல்விக்கான அரும்பணி காலத்திற்கும் நிலைத்திருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.