உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்காக கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக நடக்கும் சடங்குகள் மற்றும் சிறப்பு பூஜைகள் இன்று (ஜன.16) முதல் தொடங்கியுள்ளது.
இன்று முதல் தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கென ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட ஆச்சார்யா இன்று பரிகார பூஜைகளை நடத்தினார்.
தொடர்ந்து நாளை (ஜன.17) ராம் லல்லா சிலையின் பரிசார் பிரவேசம் விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி ஜல யாத்திரை, தீர்த்த பூஜை, கந்தாதிவாஸ் சடங்குகளும், 19ஆம் தேதி கேசராதிவாஸ், கிருதாதிவாஸ் ஔஷததிவாஸ் சடங்குகளும் நடைபெறவுள்ளன.
ஜனவரி 19ஆம் தேதி மாலை, தான்யாதிவாஸ் சடங்குகளும், 20ஆம் தேதி காலை ஷர்கராதிவாஸம், பலாத்வாஸ் சடங்குகளும், மாலையில் புஷ்பதீபம் நடக்கவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 21ஆம் தேதி காலை மத்யாதிவாஸ் மற்றும் மாலை ஷியாதிவாஸமும் சடங்குகளும் நடைபெற இருக்கின்றன.