தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
தொடர்ந்து இது குறித்து அவர் ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.
அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது.
இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் புகைப்படத்தில் திருவள்ளுவர் காவி ஆடை அணிந்திருப்பதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.