சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பை கண்காணிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்குவதால் 200 கனஅடி நீரை திறக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, இன்று (நவ.28) காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும், என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதோடு செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.