தமிழ்நாட்டில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
133 அடியில் சிலையும் தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என குறிப்பிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.