Kamalhaasan: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கமல் தனது பிரச்சாரத்தை இன்று (மார்ச்.29) முதல் தொடங்க இருப்பதாக அறிவித்தார்.
அதன்பேரில், தற்போது மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் சேலம் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். முன்னதாக அறிவிக்கப்பட்ட படி இன்று ஈரோடு மாவட்டத்தில் தனது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
ஈரோட்டை தொடர்ந்து சேலம், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.