Kerala CM Pinarayi Vijayan: நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 26) நடைபெற்று வருகிறது.
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பின்னர், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அந்த வகையில் இன்று கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கண்ணூர் மாவட்டம், பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் காலையில் வாக்களித்தார்.
வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று சாதனை படைக்கும்.
கேரளாவில் உள்ளா அனைத்து தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் மீது கேரள மக்கள் விரோத மனப்பான்மை கொண்டுள்ளனர்.
அதனால் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறாது, 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும்” என்றார்.