இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது ‘கிராமி விருது’. இந்த விருதுகள் 1959ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 66ஆவது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சக்தி ஆல்பத்திற்கு கிராமி விருது வழங்கப்பட்டது. சக்தி இசைக்குழுவின் பாடல்களுக்கு உலகின் சிறந்த ஆல்பம் பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளது.
அதேபோல அமெரிக்கா ராப் இசைக் கலைஞரான ஜெய் இசட்டுக்கு இசைத் துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் ‘இம்பாக்ட் விருது’ வழங்கப்பட்டது.
இதனை பெரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். விருது பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக அவர் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.