பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நேற்றுமுன்தினம் (பிப்.2) உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த செய்தி, அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவலை பூனம் பாண்டேவின் மேலாளர் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், பிப்.03ஆம் தேதி பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடிகை பூனம் பாண்டே “நான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கவில்லை. நான் உயிருடன் தான் இருக்கிறேன்.
துரதிர்ஷ்டவசமாக ஏராளமான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இதனை முற்றிலும் தடுக்க வேண்டிய நோயாகும்.
இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நோயால் இனி எந்த ஒரு பெண்ணும் உயிரிழக்கக் கூடாது” என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, அந்த பதிவில் தான் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பூனம் பாண்டே உயிரிழந்ததாக பரவிய தகவல் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகை பூனம் பாண்டேதான் இறந்து விட்டதாக பொய் செய்தியை சமூக வலைதளத்தில் பரப்பினார்.
இந்த நிலையில் அவர் மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் பூனம் பாண்டேவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த அமித் ராய் என்பவர் தனது வக்கீல் ஷயான் சச்சின் பாசு என்பவர் மூலம் பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொதுமக்கள் இடையே தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.