Gangai Amaran: செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘படிக்காத பக்கங்கள்’. சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஒரு பாடலில், இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது.
இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது இசை. இரண்டும் கூடினால் தான் அது பாட்டாக மாறும். சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும், சில நேரங்களில், மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு.
இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. இதைப் புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இளையராஜாவை விமர்சித்து வைரமுத்து பேசியதாக இணையத்தில் பதிவு வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் கங்கை அமரன், வைரமுத்துவை எச்சரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் நல்லவர் இல்லை.
இனிமேல் இளையராஜாவைப் பற்றி அவமரியாதையாகப் பேசினால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து என்ற பெயரே இருக்காது” என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.