Nadigar Sangam: சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் நவீன வசதிகளுடன் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு அங்கிருந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புது கட்டிடம் கட்டும் பணிகளை தொடங்கினர்.
இந்த நடிகர் சங்க கட்டடத்தில் திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சி கூடம், நடிப்பு பயிற்சி மையம் போன்றவை கட்டப்பட்டு வந்தன. 60 விழுக்காடு பணிகள் முடிந்த நிலையில் 2019ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தல் வழக்கால் இந்த கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கட்டிடப் பணிகளை தொடங்க முடிவு செய்தனர். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து வங்கியில் கடன் கேட்டனர். தமிழ்நாடு அரசு நிதி வழங்கியது. தொடர்ந்து சினிமா முன்னணி நடிகர், நடிகைகளிடம் நிதி கொடுத்தனர்.
தற்போது போதுமான நிதி கிடைத்துள்ளதால் கட்டுமானப் பணிகளை தொடங்கவுள்ளனர். அதன்படி, நேற்று நடிகர் சங்க கட்டிடப் பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. கட்டுமான பணியை நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, நடிகர் சங்க கட்டிடப் பணிகள் தொடங்கியதற்கு சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.