தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவும் – ஜோதிகாவும் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினர். இந்த படத்தை தொடர்ந்து இருவரும் ஒன்றாக இணைந்து ‘உயிரிலே கலந்தது’, ‘பேரழகன்’, ‘காக்க காக்க’, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘மாயாவி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.
அதன் பின்னர் இருவரும் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா ’36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
அதை தொடர்ந்து ‘காற்றின் மொழி’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘நாச்சியார்’, ‘மகளிர் மட்டும்’, ‘உடன்பிறப்பே’ போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் ‘ஷைத்தான்’ படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் சூர்யாவும் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பல வருடங்களாக தனித்தனியாக நடித்து வந்த இந்த காதல் ஜோடி மீண்டும் ஒன்றாக இணைத்து படம் நடிக்க தயாராகியுள்ளனர்.
18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா – ஜோதிகா நடிக்கவுள்ள படத்தை ‘சில்லு கருப்பட்டி’ படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் அல்லது ‘பெங்களூர் டேஸ்’ என்ற மலையாள படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் ஆகிய இருவரில் ஒருவர் தான் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சூர்யா – ஜோதிகாவை மீண்டும் ஒன்றாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.