‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு நமது பயணத்தில் முக்கிய மைல்கல்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

0
203

Tamilnadu Global Invesors Meet 2024: தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது, புதிதாக தொழில் தொடங்குவது, தொழில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது போன்ற முயற்சியிலுள்ள பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாடு ஜனவரி 7 மற்றும் ஜனவரி 8 ஆகிய இரு தினங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இந்த முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024, இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் முனைவர் டிஆர்பி ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!

இந்த இருநாள் மாநாடு – 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.

நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும், மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024.

‘எல்லோருக்கும் எல்லாம்’, ‘எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி’
என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் ரூ.6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here