போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத அக விலைப்படி வழங்காமல் உள்ளது.
அதனை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தினர். ஆனால், தமிழ்நாடு அரசு இதற்கு செவி சாய்க்காததால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நள்ளிரவு முதலே அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையிலிருந்து 68 பேருந்துகளுக்கு 42 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் போக்குவரத்து பணிமனையிலிருந்து பேருந்துகள் வெளியேறி விட்டது என கணக்கு காட்டுவதற்காக ஒரே ஓட்டுநரை அதிகமான பேருந்துகளை இயக்கவைத்திருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இதையடுத்து, போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பேருந்தை எடுத்துச் சென்ற ஓட்டுநர் மற்றும் பணிமனை மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில், போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தத்தால் 900ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் 10 விழுக்காடு பேருந்துகள் கூட இயங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.