உலகப் புகழ் பெற்ற சனீஸ்வரர் கோயில் சனிப்பெயர்ச்சி விழா தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின் தேதியை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாற்றில் உலகப் புகழ் பெற்ற சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். அந்த வகையில் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த சனிப்பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அன்றைய தினம் சனீஸ்வரர் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இந்நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவின் அழைப்பிதழை, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.
பின்னர் இது குறித்து ஆட்சியர் குலோத்துங்கன் கூறுகையில் “சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காகக் காரைக்கால் உள்ளிட்ட முக்கிய இடங்களிலிருந்து கோயிலுக்கு 25 பேருந்துகள் இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக கோயில் அருகே ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி தரிசனத்துக்காக ஆன்லைன் டிக்கெட்டுகள் வரும் 15ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது” என தெரிவித்தார்.