திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி போராடும் மனித உரிமை அமைப்புகளை போராட அனுமதிக்காதது கொடுங்கோன்மையாகும் என சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ‘பெல்’ தனியார் பள்ளியில் படித்த 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக அவமானப்படுத்தி, தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மனவுளைச்சலுக்கு அந்த பள்ளி நிர்வாகம் ஆளாக்கிய செயல் பெரும் அதிர்ச்சியும், கடும் கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது பிள்ளையை இழந்துவாடும் மாணவர் நரேனின் பெற்றொருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவரை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
அவர்களை காவல் துறையை ஏவி கைது செய்துள்ள திமுக அரசின் சிறிதும் மனச்சான்று அற்ற கொடுஞ்செயல் வன்மையான கண்டிக்கப்படுகிறது. மாணவரின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நீதி வேண்டி போராடும் மனித உரிமை அமைப்புகளை போராட அனுமதிக்காதது கொடுங்கோன்மையாகும்.
இதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் சமூகநீதி ஆட்சியா? 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டபோது, பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாகச அரசு செயல்பட்டது. அதே, அணுகுமுறையையே தற்போதும் திமுக அரசு கடைபிடிக்கிறது.
தமிழ்நாடு அரசு இனியாவது அறத்தின் பக்கம் நின்று மாணவன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நீதிவிசாரணை செய்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்!