செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் பொன்மார் பகுதியைச் சேர்ந்தவர் விமல் ராஜ் (35). இவர் பொன்மாரில் உள்ள தேவாலயத்தில் மதபோதகராக இருக்கிறார். இவர், 2020ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இருவரும் பொன்மாரில் மலை தெருவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு சாரா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், விமல்ராஜுக்கு தனது மனைவி வைசாலி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் தம்பதி வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்த போது வைசாலியை, விமல் ராஜ் அடித்து உதைத்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டார்.
ஆனால், மனைவி வீட்டாரிடம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வைசாலி இறந்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து, அவரது உறவினர்கள் வைசாலி உடலை அடக்கம் செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபட்ட ஆரம்பித்தனர். வைசாலியின் உறவினர்கள் மும்பையில் இருந்து வருதற்கு நேரம் ஏற்பட்டது.
தொடர்ந்து, நேற்று மதியம் வீட்டிற்கு வந்த வைசாலியின் உறவினர்கள், இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், வைசாலியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விமல் ராஜிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவளை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை விமல் ராஜ் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்தனர்.