MK Stalin CM: தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலி வெயில் தாக்கத்தில் இருந்து ஓய்வெடுக்க குடும்பத்துடன் இன்று (ஏப்ரல் 29) கொடைக்கானல் புறப்பட்டார்.
இதற்கா சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சரிடம் பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டியன் மனு அளிக்கச் சென்றார்.
ஆனால், அவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர் கையில் மனுவுடன் சேர்த்து கஞ்சா பொட்டலத்தையும் வைத்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் பாஜக நிர்வாகியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சங்கர் பாண்டியனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டும் விதமாக கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்றதாக பாஜக நிர்வாகி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.