கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோயில் உள்ளது. இங்குள்ள ஏழு மலைகளைத் தாண்டினால் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கும் சிவபெருமானை தரிசினம் செய்யலாம். இதற்காக, ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில், நேற்று மதியம் 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகோடி (46) என்பவர் தனது நண்பர்கள் 10 பேருடன் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார்.
முதலாவது மலை ஏறும்போது தனக்கு வயிறு வலிப்பதாக கூறி புண்ணியகோடி வாந்தி எடுத்திருக்கிறார். இதனால் அவரது நண்பர்கள் உடேனே மலையில் இருந்து இறக்கி 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், புண்ணியகோடி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறிய 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். பலருக்கும் மூச்சுத் தினறல் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தனர். எனவே மூச்சுத் திணறல், உடல்நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.