Chennai floods: சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு KPY பாலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் வரும் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் KPY பாலா. தனது வித்தியாசமான பாணியில் நகைச்சுவை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். சின்னதிரையைத் தொடர்ந்து பாலா தனது திரைத்துறை பயணத்தைத் தொடங்கினார். ஜுங்கா, தும்பா, சிக்சர், புலிக்குத்தி பாண்டி என பல்வேறு திரைப்படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மிக முக்கியமாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். மக்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகராக இருந்தாலும் அவருக்கு மறுமுகம் உள்ளது. மக்களுக்கு அவர் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு, முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்களுக்கு உதவ ஆரம்பித்தார். குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டு அவர்களைப் படிக்க வைத்தார். தொடர்ந்து, மலைக் கிராம மக்கள் மற்றும் முதியோர் இல்லத்துக்குத் தனது சொந்த செலவில் நான்கு ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து மக்களுக்கு அவர் செய்து வரும் உதவிகளைக் கண்டு நெகிழ்ச்சியடைந்து வந்து நிலையில் தற்போது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் உதவி செய்திருக்கிறார். மிக்ஜாம் புயலால் மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதனைக் கண்ட KPY பாலா ஒரு குடும்பத்துக்கு 1000 ரூபாய் என 200 குடும்பங்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.
அவரது இந்த செயலுக்கும் பலரும் பாராட்டு தெரிவித்துவருகிறார். இது குறித்து பாலா கூறுகையில், “என்னை வாழ வைத்த சென்னை மக்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன். எனது வங்கியிலிருந்த 2 லட்சம் ரூபாய் மொத்தமாக எடுத்து வந்து மக்களுக்கு உதவுகிறேன்” என்றார். சென்னை மக்களுக்குப் பலரும் பல்வேறு உதவிகளைச் செய்துகொண்டு தான் இருக்கிறார். அவர்களுள் ஒருவராக பாலா இருந்தாலும், தனது மொத்த பணத்தையும் எடுத்து மக்களுக்கு உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.